ஒய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் கொள்ளை!

 
robbery

ஓமலூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் கடந்த 4ஆம் தேதி குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலை ஆரோக்கியசாமியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆரோக்கியசாமிக்கு தகவல் தெரிவித்தனர்.

salem

அதன் பேரில், ஆரோக்கியசாமி உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது, மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 50 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து ஆரோக்கியசாமி, ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.