அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிப்பு... தருமபுரி ஆட்சியரின் கார் முன்பு அதிமுக எம்எல்ஏ தர்ணா!

 
dharmapuri

அரசு நிகழ்ச்சிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி, தருமபுரி மாவட்ட ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து பாப்பிரெட்டிபட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி, இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, அரசு நிகழ்ச்சிகளில் அதிமுக எம்எல்ஏ-க்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின்போது, தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்ட உதவிகள், புதிய திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சி, ஆய்வுக் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளை புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தார்.

ej

மேலும், சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ-க்களையும், திமுக நிர்வாகிகளையும் வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்த எம்எல்ஏ கோவிந்தசாமி, இதற்கு துனணயாக இருக்கும் மாவட்ட  நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தார். மேலும், அரசு நிகழ்ச்சிகளில் அதிமுக எம்எல்ஏ-க்கள் பங்கேற்க தலைமை செயளாலர் இறையன்பு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டேன் என்றும் தெரிவித்தார். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் அவர் போராட்டத்தை கைவிடவில்லை.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தர்ணாவில் ஈடுபட்ட எம்எல்ஏ கோவிந்தசாமியை சமாதானம் செய்து அழைத்துச்சென்றார். அப்போது, பேசிய முன்னாள் அமைச்சர் அன்பழகன், அரசு விழாக்களில் அதிமுக எம்எல்ஏ-க்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து தலைமை செயலாளரிடம் நேரில் சென்று முறையிடுவோம் என தெரிவித்தார். இதனால் சுமார் 1 மணி நேரமாக ஆட்சியர் காரின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டும் மாவட்ட ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்தாதது, அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.