குடும்ப தகராறில் மனைவியை கொன்று, கணவர் விஷம் குடித்து தற்கொலை!

 
poison

திருவண்ணாமலை அருகே குடும்ப தகராறில் 2-வது மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்று விட்டு கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி துரைராஜ். இவரது 2-வது மனைவி வளர்மதி. தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த துரைராஜ் உருட்டுக்கட்டையால் வளர்மதியை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

tiruvannamalai

இதனை அடுத்து, துரைராஜ் அங்கிருந்து தப்பியோடினார். தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிந்து, தப்பியோடிய துரைராஜை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று கிராமத்தின் அருகே உள்ள தோட்டத்தில் துரைராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்தார்.

தொடர்ந்து, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.