கும்பகோணத்தில் பட்டதாரி இளைஞர் வெட்டி படுகொலை - மர்மகும்பல் வெறிச்செயல்

 
murder

கும்பகோணத்தில் நள்ளிரவில் பட்டதாரி இளைஞர் மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மூத்த மகன் யோகேஷ்வரன்(21). பி.காம் படித்து முடித்துள்ள இவர் தற்போது வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு யோகேஷ்வரன், கும்பகோணத்தை சேர்ந்த நண்பரான நந்தகுமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

thanjavur

வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றபோது அவர்களை 6 பேர் கும்பல் வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு யோகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகேஸ்வரன் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தும், தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடியும் வருகின்றனர். இதனிடையே, நள்ளிரவில் பட்டதாரி இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கும்பகோணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.