வால்பாறையில் பைக் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து - 2 இளைஞர்கள் பலி!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர்கள் அரவிந்த்(20) மற்றும் சந்தோஷ்(25). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர்கள் நேற்று மாலை வால்பாறைக்கு சென்றுள்ளனர். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் உருளிக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். உருளிக்கல் எஸ்டேட் சாலையில் வளைவில் சென்றபோது எதிரே வந்த அரசுப்பேருந்து, அரவிந்தின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அரவிந்த், சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பேருந்து அதிவேகமாக வந்ததால் விபத்து நேரிட்டதாக கூறி இறந்தவர்களின் உறவினர்கள் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


