ஈரோடு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மொத்த வாக்காளர்கள் 19,87,244 பேர்!

 
voter list

ஈரோடு மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட நிலையில், மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 87 ஆயிரத்து 244 வாக்காளர்கள் உள்ளனர். 

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி 1ஆம் தேதி வாக்காளராகும் தகுதி நாளாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் 2 மாதங்கள் முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்கவும், ஏற்கனவே பதிவு செய்திருந்த வாக்காளர்கள் தங்கள் பெயரில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும் முகவரி  மாற்றியவர்கள் அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, என்று வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. 

voters

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  அதனை, ஆர்டிஓ பிரேமலதா பெற்றுக்கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானி சாகர் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

மாவட்டம் முழுவதும் 1.11.2021 படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 66 ஆயிரத்து 546 ஆகும்.  புதிதாக 31 ஆயிரத்து 170 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 10 ஆயிரத்து 472 பேர் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 5.1.2022-ன் படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 19 லட்சத்து 87 ஆயிரத்து 244 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 65 ஆயிரத்து 616 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 21 ஆயிரத்து 499 பேர் உள்ளனர். பிற வாக்காளர்கள் 129 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்