பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
Oct 24, 2020, 19:24 IST1603547640000
நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இங்கு நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.27 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 450 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தொடர்ந்து 2 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.