ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்: ஈரோட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
ஆன்லைன் வர்த்தகத்தில் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், மன உளைச்சலில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்கொண்ட சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு பழையபாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் நரசிம்மன்(41). இவரது மனைவி பாக்கியலட்சுமி(39). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நரசிம்மன் ஈரோடு சம்பத் நகரில் சேர்கான் என்ற ஆன்லைன் வர்த்தகம்(டிரெடிங்) அலுவலகம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக பல லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனவேதனையுடன் காணப்பட்ட நரசிம்மன், நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நரசிம்மனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, நரசிம்மன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.