ஈரோடு மாவட்ட பீடி தொழிலாளர்களுக்கு ரம்ஜான் போனஸ்… இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பீடி தொழிலாளர்களுக்கு ரம்ஜான் போனஸ் வழங்குவது தொடர்பாக பீடி நிறுவனங்களுடன், தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடி ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்களுக்கு ரம்ஜான் பண்டிகைக்குமுன் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி, 2020–21ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் இதர கோரிக்கைகளை ஏ.ஐ.டி.யு.சி., – கொங்கு பீடி தொழிலாளர் சங்கம், மாவட்டத்தில் உள்ள பீடி கம்பெனிகளுக்கு அனுப்பியது.
இதனையடுத்து, நேற்று நடந்த பேசசுவாரத்தையில், ஈரோடு வி.பி.ஆர். காலேஜ் பீடி நிர்வாகத்துக்கும், ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்துக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, அனைத்து பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கும் இந்தாண்டு அவர்கள் சுற்றிய 1,000 பீடிகளுக்கு, ரூ.26 வீதம் கணக்கிட்டு போனஸ் வழங்கவும், கொரோனா ஊரடங்கு காலத்தில், அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கிய தொகையில் ரூ.1,000 கொரோனா நிவாரணமாக வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன், ஏற்கனவே வழங்கிய தொகையில் ரூ.1,000 பிடித்தம் செய்திருந்தால், அதனை திரும்ப வழங்கவும், குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி கடந்த ஏப்ரல் 1 முதல், 1,000 பீடி சுற்ற, ரூ.9.39 வீதம் பஞ்சப்படி உயர்வு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு, அதனை மே முதல் வாரத்தில் நிலுவையுடன் சேர்த்து வழங்க ஒப்பு கொள்ளப்பட்டது.
இதேபோல், ஈ.ஏ.பீரான் பீடி கம்பெனி, இந்தாண்டு போனஸாக, 1,000 பீடிக்கு, ரூ.25 வழங்க முடிவானது. இதன் மூலம், 2,000 தொழிலாளர்கள் பயன் பெறுவர் என ஏஐடியுசி, சங்க பொதுச்செயலாளர் எஸ்.சின்னசாமி தெரிவித்தார்.