வெளிமாவட்ட வியாபாரிகள் வந்ததால், ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் 40% நடந்தது!

 
textile market textile market

வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை தந்ததால், புகழ்பெற்ற ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி சந்தையில் நேற்று மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடைபெற்றது.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி சந்தையானது உலகப் புகழ் பெற்றது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளைக் மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள்.  கொரோனா தாக்கத்திற்கு பிறகு ஜவுளி சந்தை வியாபாரம் முடங்கியது. தற்போது ஓரளவு அதிலிருந்து மீண்டு வருகிறது. 

textile market

இந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் வெளி மாநில வியாபாரிகள், உள் மாவட்ட வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வரவில்லை. இதனால் கடந்த சில வாரமாக கூடிய சந்தையில்   வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வியாபாரம் மந்த நிலையிலேயே நடந்தது. மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. சில்லறை வியாபாரம் பெயரளவிலேயே நடந்தது. இந்த நிலையில், நேற்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். 

குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, ராஜபாளையம், செங்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் மொத்த விற்பனையில் துணிகளை வாங்கிச் சென்றனர். இதனால் நேற்று மொத்த விற்பனை 40 சதவீதம்  நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதைப்போல், சில்லறை வியாபாரம் 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  இன்னும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என தொடர்ந்து பண்டிகை வர உள்ளதால், இனி வரும் வாரங்களில் ஜவுளி  வியாபாரம் சூடு பிடிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.