மதுபோதையில் தகராறு செய்த எலெக்ட்ரீசியன் படுகொலை - தம்பி வெறிச்செயல்

 
murder

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மதுபோதையில் தகராறு செய்த அண்ணனை, கல்லால் தாக்கி கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சாம்பான் ஊருணி கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி இந்திரா. இவர்களது மகன்கள் ரவிகுமார்(43), ராம்குமார்(40). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆக வில்லை. இந்த நிலையில், எலெக்ட்ரீசியன் வேலைக்கு செல்லும் ரவிக்குமார், குடித்துவிட்டு நாள்தோறும் பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், தம்பதியினர் இருவரும் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று தங்கி இருந்தனர்.  இதனால், ராம்குமார் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

sivagangai

அப்போது, மதுபோதையில் வீட்டிற்கு வந்த ரவிகுமார், தம்பியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராம்குமார், கல்லால் ரவிகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். நேற்று காலை முருகேசன், இந்திரா தம்பதியினர் வீட்டிற்கு வந்தபோது ரவிகுமார் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி ராம்குமாரை கைது செய்தனர்.