மழையால் கருங்கல்பாளையம் சந்தைக்கு 500 மாடுகள் மட்டுமே வரத்து... வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்!

 
cattle market

தொடர் மழை காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு குறைந்த அளவிலான மாடுகளே வரத்தான நிலையில், வெளி மாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தமடைந்தது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் விற்பனைக்காக தங்களது மாடுகளை கொண்டு வருவது வழக்கம். இதேபோல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, மாடுகளை வாங்கிச் செல்வதும் வழக்கம். 

cattle

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வெளி மாநில வியாபாரிகள் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வருவது இல்லை. மேலும், மாடுகள் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் பசு - 300, எருமை - 150, கன்று - 50 என மொத்தம் 500 மாடுகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. அதேவேளையில் நேற்றும் வெளி மாநில வியாபாரிகள் வராததால், கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் விற்பனை மந்தமாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.