விவசாய கிணற்றில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்னமண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(37). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இன்று கருப்பசாமி விவசாய தோட்டத்தில் உள்ள மின்மோட்டாருக்கு குளிப்பதற்காக சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி அவர் 60 அடி ஆழ கிணற்றில் விழுந்தார்.
நீச்சல் தெரியாததால் தத்தளித்த அவர் நீரில் மூழ்கினார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு மூலம் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் சுமார், ஒரு மணிநேர தேடுதலுக்கு பின் கருப்பசாமியை சடலமாக மீட்டனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த அம்பிளிக்கை காவல் நிலைய போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.