கோவை மாநகராட்சியில் இன்று முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - மாநகராட்சி ஆணையர்!

 
cbe

கோவை மாநகராட்சி பகுதிகளில் தினசரி கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 6 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனையில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு சோதனை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 500 முன்கள பணியாளர்களுக்கு வெப்பமானி, பல்ஸ் ஆக்சி மீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார். இதனை அடுத்து, முன்கள பணியாளர்களுக்கு வீடு வீடாக சென்று எவ்வாறு சோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுரைகள் வழங்கினார்.

cbe

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது,  மாநகராட்சி முழுவதும் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் 500 முன்கள பணியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் வீடு வீடாக சென்று மக்களின் அறிகுறிகளை கேட்டு காய்ச்சல், உடல் வெப்பம், உடலின் ஆக்சிஜன் அளவுகளை சோதனை செய்வர். மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஆர்.எஸ்.புரம் கலை அரங்கத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதில், கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும். கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை சோதனை மையத்திற்கு அழைத்துச் செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களை தொடர்புகொண்டு அவர்களின் நிலையை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தகவல்களுக்கு 0422 - 4585800 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து கொடிசியாவில் டி ஹாலில் 350 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஹால் இ-யில் மேலும் 300 படுக்கை வசதிகள் இன்று தயாராகும்.

kodisiya

கொரோனா தொற்றின் பரவலுக்கு ஏற்ப, அதாவது நாள் ஒன்றுக்கு 500 முதல் 4000 வரை தொற்று உறுதியானால் 15 மருத்துவர்கள், 75 செவிலியர்கள், 10 மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவர். நாள் ஒன்றுக்கு 1300 பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 6000 பேரை பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, என அவர் தெரிவித்தார்.