கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலி... ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது!

 
cattle market

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு இன்று மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது.

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கமாகும். இந்த மாட்டுச் சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா,கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம். இதுபோல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வருவார்கள். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக டிசம்பர் இறுதி வாரத்தில் இருந்தே சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி விடும். 

cattle market

மேலும், மாடுகளை வாங்குவதற்காக வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் சீசன் விற்பனை கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த வாரம் அதிக அளவில் மாடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் கொரோனா ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் போல 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 70 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையானதாக மாட்டுச்சந்தை வியாபாரிகள் கூறினர்.