சென்னையில் ரூ.50 லட்சம் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது
சென்னை
சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 10 டன் குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை சாத்தாங்காடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு சாத்தாங்காடு காவல் நிலைய போலீசார் மற்றும் வணிக வரித்துறை உதவி ஆணையர் தலைமையிலான குழுவினர், சிஎம்டிஏ ஸ்டீல் யார்டு பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்ற சரக்கு வாகனத்தை பிடித்து அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, சுமார் 10 ஆயிரத்து 150 கிலோ அளவிலான குட்கா புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கனரக சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், குட்கா பொருட்களை கடத்தியது தொடர்பாக வண்ணாரபேட்டையை சேர்ந்த ஓட்டுநர் கோவிந்தன் என்பரை கைதுசெய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.