பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் பாஜகவினர் உண்ணாவிரதம்!

 
bjp

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோவையில் பாஜக சார்பில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.5, ரூ.10 என குறைத்தது. இதனை தொடர்ந்து, பாஜக ஆளும் மாநில அரசுகள் விலை குறைப்பை அமலுக்கு கொண்டு வந்தன. ஆனால், தமிழகம் உள்ளிட்ட  மாநிலங்களில் விலைக்குறைப்பு அமலுக்கு வரவில்லை. 

இந்த நிலையில், பெட்ரோல் -டீசல் மீதான விலையை குறைக்க வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.  அதன்படி, கோவை சிவானந்தா காலனியில் இன்று பா.ஜ.க துணை தலைவர் கனகசபாபதி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக போராட்டம் நடைபெறும் பகுதிக்கு மாட்டு வண்டியில் வந்து பாஜகவினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

cbe

போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை தலைவர் கனகசாபாபதி, காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தினால் இப்போதும் மத்திய அரசு வட்டி செலுத்தி வருவதாகவும், இந்த நிலையில் ரூ.9 ஆயிரம் கோடி வருவாயை விட்டுக் கொடுக்கும் விதமாக பெட்ரோல் - டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது என்றும் கூறினார். பா.ஜ.க  மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளபோதும், தமிழகத்தில் அமலுக்கு வரவில்லை என தெரிவித்தார். மேலும், தமிழக அரசை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் கனகசபாபதி தெரிவித்தார்.