16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது!
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவர், தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு, அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதுநாளடைவில் காதலாக மாறிய நிலையில் அந்த இளைஞர் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இது குறித்து அவர் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அதிர்ச்சியடைந்த அவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் புகார் அளித்தனர். தொடர்ந்து, அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில் சிறுமியின் பெற்றோர் ஆட்டோ ஓட்டுநர் மீது ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை நேற்று நள்ளிரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.