போடி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - பொறியியல் மாணவர் பலி!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பொறியியல் மாணவர் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிளி. இவரது மகன் லோகேஷ்வரன் (19). இவர் போடிநாயக்கனூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை லோகேஷ்வரன், அதே பகுதியை சேர்ந்த காட்டுத்துரை (19) என்ற மாணவருடன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது போடி அருகே சென்றபோது தேனியில் இருந்து போடி நோக்கி வந்த தனியார் பேருந்து, எதிர்பாராத விதமாக லோகேஷ்வரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்த லோகேஷ்வரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்டுத்துரை பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போடி டவுன் போலீசார், பலியான மாணவர் லோகேஷ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை மடக்கிப்பிடித்து, பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் பொறியியல் மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.