ராதாபுரம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய், மகன் பலி!

 
drowning

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய் - மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அடுத்த கும்பிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி பேச்சியம்மாள் (38). இவர்களுக்கு கார்த்திக் (13), சுபாஷ் (11) என 2 மகன்கள் உள்ளனர். நேற்று பேச்சியம்மாள், தனது மகன்களுடன் கிராமத்தில் உள்ள பழைய கல்குவாரி குட்டைக்கு குளிப்பதற்காக சென்றிருந்தார். அவர் துணி துவைத்துக்கொண்டிருந்த நிலையில், சிறுவர்கள் இருவரும் குட்டையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவர்கள் கார்த்திக், சுபாஷ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதால், நீச்சல் தெரியாமல் நீரில் தத்தளித்தனர். 

nellai

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பேச்சியம்மாள், உடனடியாக குட்டையில் இறங்கி மகன்களை காப்பாற்ற முயன்றார். மூத்த மகன் கார்த்திகை மீட்டு கரைக்கு கொண்டு வந்த அவர் பின்னர், சுபாஷை மீட்க முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக பேச்சியம்மாள், அவரது மகன் சுபாஷ் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து அந்த கிராம மக்கள் ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய், மகன் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.