பொன்னமராவதி அருகே கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி... மகனுக்கு நீச்சல் கற்றுகொடுத்தபோது சோகம்!

 
drowned

பொன்னமராவதி அருகே மகனுக்கு நீச்சல் கற்றுகொடுத்த போது கண்மாயில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி கிராமத்தை சேர்ந்தவர் சின்னாத்தாள். இவரது மகன் ராஜா. விவசாயி. இவரது மகன் ஸ்ரீதர்(8). நேற்று முன்தினம் மாலை ராஜா, தனது மகனுடன் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றிருந்தார். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக கண்மாய் முழுமையாக தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்த நிலையில், ராஜா, தனது மகனுக்கு கண்மாயின் ஆழமான பகுதிக்கு சென்று நீச்சல் கற்று கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர். எனினும் சிறுவன் ஸ்ரீதர் நீச்சலடித்து கரை சேர்ந்தார். 

drowned

ராஜா தண்ணீரில் மூழ்கியதை கண்ட அதிர்ச்சிக்குள்ளான கிராமத்தினர், இது குறித்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவாகியும் அவரை மீட்க முடியவில்லை. தொடர்ந்து, நேற்று காலை ராஜாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பொன்னமராவதி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.