தருமபுரி அருகே இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள மடதள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சுகுவாணன்(29). ஐ.டி.ஐ படித்துள்ள இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த சுகுவாணன் ஞாயிறுக்கிழமை அன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை தொங்கனூர் ரயில் நிலையம் அருகே சுகுவாணன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிந்தல்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரயில்வே போலீசார் மற்றும் மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுகுவாணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனியார் நிறுவன ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.