அரூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது!

 
arrest

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மாயமாகினார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனை அடுத்து, அவர்கள் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

pocso

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அதன் பேரில், போலீசார் வல்லரசு மற்றும் மாயமான சிறுமியை தேடி வந்த நிலையில், வல்லரசு அரூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் சிறுமியை கடத்திச்சென்று வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து, 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வல்லரசு கடத்தியதும், 2 வாரமாக உறவினர்கள் வீட்டில் பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், தொடர்ந்து வல்லரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.