திருச்சியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை!

 
suicide

திருச்சியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி இ.பி.ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் களவழகன். இவரது மனைவி சகுந்தலா. இவர்களது மகள் காவியா(22). இவருக்கு, தாய் மாமன் ராமச்சந்திரனுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் காவியா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை தனது தாய் வீட்டிற்கு வந்த காவியா, மாலை கணவர் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றுள்ளார்.

trichy gh

இதனை தொடர்ந்து, நேற்றிரவு சகுந்தலா காவியாவின் வீட்டிற்கு சென்றபோது, கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவை தட்டியும், அவர் திறக்காததால் சந்தேகமடைந்த சகுந்தலா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளார். அப்போது, காவியா தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார்.

தகவல் அறிந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சகுந்தலா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.  மேலும், திருமணமாகி 3 ஆண்டுகளில் காவியா தற்கொலை செய்து கொண்டதால், இந்த சம்பவம் குறித்து திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து வருகின்றனர்.