திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... மயிலாடுதுறை அருகே சோகம்!

 
suicide

மயிலாடுதுறை அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள மேலபாதி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்ராஜ். கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காவியா(20) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு இருந்து வந்துள்ளது. இதில் காவியா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

mayiladuthurai

இந்த நிலையில், சம்பவத்தன்று பிரவீன்ராஜ் - காவியா இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த காவியா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து காவியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 2 ஆண்டுகளில் காவியா தற்கொலை செய்து கொண்டதால், வரதட்சணை கொடுமை காரணமா? என  சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.