சேலம் அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
Death

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சலூன் கடை தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள சாம்ராஜ் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவா (40). இவர் சலூன் கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிவா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் சிவா கிடைக்கவில்லை.  

salem

இந்த நிலையில், அழகாகவுண்டனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக மேச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த நபர் சிவா என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து சிவாவின் மனைவி அளித்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்து சென்ற சிவா நண்பர்களுடன் சேர்ந்து டாஸ்மாக்கில் மது அருந்தியது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரது நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.