திருமணமாகாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... ஓசூர் அருகே சோகம்!

 
suicide

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மத்திகிரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் கிரிஜா (28). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர். ஆனால் திருமணம் அமையவில்லை. இதனால் கிரிஜா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த கிரிஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் கிரிஜா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.

hosur

இது குறித்து மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரிஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.