ஆம்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ; கிராம உதவியாளர் உள்பட இருவர் பலி!

 
accident

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கிராம உதவியாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் அருகே உள்ள அயித்தம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு மூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் உமராபாத் அயித்தம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் வாணியம்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை உதயகுமார் (20) என்பவர் பணிமுடிந்து தனது இருசக்கர வாகனத்தில் பேரணாம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அயித்தம்பட்டு கூட்டுரோடு பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக இருவரது இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

ambur

மூர்த்தி பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிசிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. தகவலின் பேரில் உமராபாத் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.