மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல் - இளைஞர் பலி!

 
accident

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் பெரியண்ணன் (28). இவர் நேற்று தனது நண்பரான மருங்காபுரியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். வளநாடு கைகாட்டி அடுத்த காரணிப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றபோது, பெரியண்ணன் வாகனம் மீது, நெல்லையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் துக்கிவீசப்பட்ட பெரியண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் பலத்த காயமடைந்தார். 

manapparai

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வளநாடு போலீசார், பெரியண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.