கோவையில் மின்இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை மின்பொறியாளர் உள்பட இருவர் கைது!

 
bribe

கோவையில் வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை மின்பொறியாளர் உள்ளிட்ட 2 பேரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மலுமிசம்பட்டி எம்.ஜி.நகரில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தற்காலிக மின்இணைப்பு பெறுவதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை மின்பொறியாளராக உள்ள சுப்பிரமணி(50) என்பவரை அணுகியபோது, மின்இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. கார்த்திகேயன் கேட்டுக் கொண்டதின் பேரில் இறுதியாக ரூ.5 ஆயிரம் கொடுத்தால் மின்இணைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

arrest

லஞ்சம் தர விரும்பாத கார்த்திகேயன், இது தொடர்பாக கோவை மாவட்ட லஞ்ச ஓழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை கார்த்திகேயனிடம் கொடுத்து, அதனை சுப்பிரமணியிடம் வழங்கும்படி அறிவுறுத்தினர். அதன் படி நேற்று மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற கார்த்திகேயனிடம், சுப்பிரமணி அங்கு போர்மேனாக பணிபுரியும் சங்கர் கணேஷ் என்பவரை அனுப்பி லஞ்ச பணத்தை வாங்கினார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான போலீசார், சங்கர் கணேசை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அலுவலகத்தில் வைத்து இளநிலை மின்பொறியாளர் சுப்பிரமணி, சங்கர் கணேஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் மின்இணைப்பு வழங்கம் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதனை அடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.