திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஆக கார்த்திகேயன் பொறுப்பேற்பு!

 
TRICHY

திருச்சி மத்திய மண்டல புதிய ஐ.ஜி. ஆக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட கார்த்திகேயன், மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.  

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஆக பணிபுரிந்து வந்த சந்தோஷ் குமார் ஐபிஎஸ், சமீபத்தில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து, புதிய ஐ.ஜி ஆக, திருச்சி மாநகர காவல் ஆணையராக பணிபுரிந்த கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, இன்று அவர் மத்திய மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவர்  திருப்பூர் மாநகர காவல் ஆணையராகவும், கோவை சரக டிஐஜி ஆகவும் பணியாற்றி உள்ளார். 

பொறுப்பேற்ற பின் ஐ.ஜி. கார்த்திகேயன் தெரிவித்ததாவது,  மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் முதல்வரின் ஆணைக்கேற்ப போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திட 2023-ம் ஆண்டில் அதிக முக்கியத்துவம் தரப்படும் என்றும், கஞ்சா, குட்கா மற்றும் இதர போதைப் பொருட்களை கடத்துதல், பதுக்குதல், சட்ட விரோதமாக விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். 

trichy

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்குமாறு, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், காவல் நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அளிக்கும் புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  மணல் கடத்தல், சட்ட விரோதமாக சாராய விற்பனை, லாட்டரி விற்பனை போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி உள்ளதாக கூறினார்.

மேலும், இணையதள மோசடிக் குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளாதாக கூறிய ஐஜி கார்த்திகேயன், சட்ட விரோத மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுதல் ஏற்படுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடி மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று எச்சரித்தார். மேலும், சாலை விபத்துக்களை குறைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள், வேலை நாட்களில் தினமும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை தன்னை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.