திருச்சி அருகே கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - இளைஞர் பலி

 
dead body

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சாலையோர கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் இளைஞர் பரிதாமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சதிஷ்(21). இவர் நேற்று தனது நிலத்தை உழுவதற்காக உறவினருக்கு சொந்தமான டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, மிளகாய் செடிகள் சேதமடையாமல் இருக்க டிராக்டரை சாலையோரம் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த விவசாய கிணற்றில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள், இதுகுறித்து தீயணைப்பு நிலையம் மற்றும் சிறுகனுர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

trichy ttn

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் கிணற்றில் விழுந்த டிராக்டரை கிரேன் வாகனம் மூலம் மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர் தீயணைப்புத்துறையினரின் தேடுதலின்போது சதிஷ் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து சிறுகனுர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.