திருவண்ணாமலை அருகே பைக் மீது டிராக்டர் மோதி விபத்து - தொழிலாளி பலி!
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அருகே உள்ள கேளுரில் வசித்து வருபவர் காசி. இவரது மகன் அசோக்குமார். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று அசோக்குமார், தனது மனைவியின் உறவுக்கார பெண்ணை போளுரில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். நைனாவரம் அருகே சென்றபோது முன்னால் கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற டிராக்டரை, அசோக்குமார் முந்தி செல்ல முற்பட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மீது மோதியது.
இதில் வாகனத்தில் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது டிராக்டர் சக்கரம் அசோக்குமார் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உறவுக்கார பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலின் பேரில் போளூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டர் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.