திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது ; 1.7 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல்!

 
dgl

திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை கைது செய்த ஐஜி தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து 1.7 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக தென் மண்டல ஐ.ஜி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஐஜி தனிப்படை போலீசார் அச்சாம்பட்டி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அச்சாம்பட்டியை சேர்ந்த சூர்யா (30), கண்ணன் (22) மற்றும்  பெரிய மல்லணம்பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்கிற டோனி (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

arrest

தொடர்ந்து, அவர்களை தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 1.700 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.