காதலியுடன் வீடியோ காலில் பேசிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்... கொடுமுடியில் சோகம்!

 
dead

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கோயில் பணியாளர் காதலியுடன் வீடியோ காலில் பேசிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் ரஞ்சித் (21). இவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், பிரசாதம் வழங்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். இதற்காக கொடுமுடி மேற்கு அக்ரஹாரா பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்தார். இதனிடையே, ரஞ்சித் கும்பகோணத்தை சேர்ந்த பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் நாள்தோறும் போனில் பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு தனது காதலியுடன் வீடியோ காலில் பேசிய ரஞ்சித், மனமுடைந்த நிலையில் காணப்பட்டு உள்ளார். மேலும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்து விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.  இதனால் அதிர்ச்சிக்குள்ளான காதலி, ரஞ்சித்துடன் தங்கியுள்ள பார்த்திபன் என்பவருக்கு தகவல் அளித்து, நேரில் சென்று பார்க்கும்படி தெரிவித்துள்ளார்.

erode

இதனை அடுத்து, பார்த்திபன் வீட்டிற்கு சென்றபோது ரஞ்சித் தூக்கிட்ட நிலையில் தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பார்த்திபன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதித்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரஞ்சித் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலின் பேரில் கொடுமுடி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து ரஞ்சித்தின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ரஞ்சித் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.