மஞ்சூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறை கூண்டில் சிக்கியது!

 
nilgiris

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி வனத்துறையினர் அமைத்த கூண்டில் சிக்கியது. 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடி ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள் சென்றுவிடும் அந்த கரடி, இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகள், கடைகளின் கதவுகளை உடைத்து உணவு பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வந்தது. இதனால் மஞ்சூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.

nilgiris

மேலும், அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, வனத்துறையினர் கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதியில் கரடியை பிடிக்க கடந்த வாரம் கூண்டு வைத்தனர். தொடர்ந்து, கரடியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை வனத்துறை அமைத்த கூண்டியில் கரடி சிகிகியது. இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கூண்டில் இருந்த கரடியை மீட்டு முக்குறுதி தேசிய பூங்கா வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். கூண்டில் இருந்து வெளியேறிய கரடி மின்னல் வேகத்தில் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அச்சுறுத்திய கரடி பிடிபட்டதால் மஞ்சூர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.