பெரம்பலூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை!
பெரம்பலூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் சாணிப்பவுடரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். தொழிலாளி. இவரது மனைவி கவிதா (37). இவர்களுக்கு அபிஷேக்(15), ஜீவிதா (11) என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கவிதா, கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், மனமுடைந்த நிலையில் இருந்த கவிதா வீட்டிலிருந்த சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கிய நிலையில் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தினர மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கவிதாவின் பெற்றோர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.