ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.64.45 லட்சம் வசூல்!

 
srirangam hundial

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.64 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம், 148 கிராம் தங்கம் மற்றும் 990 கிராம் வெள்ளி ஆகியவை வசூலாகி உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் சிறப்புக்கும் உரியது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,  வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நம்பெருமாளை வழிபட்டு செல்வர். இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் ஒருமுறை எண்ணப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.

srirangam

இதில் பக்தர்கள், தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு காணிக்கைகளை எண்ணினர். முடிவில் நடப்பு மாத உண்டியல் காணிக்கையாக ரூ.64 லட்சத்து, 45 ஆயிரத்து 942 வசூலாகி ரொக்கம் உள்ளது. மேலும், 148 கிராம் தங்கம் மற்றும் 990 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்ற நிலையில், டாலர் உள்ளிட்ட 233 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக வந்துள்ளது. இத்தகவலை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார்.