குனியமுத்தூர் தர்காவில் அதிமுக சார்பில் சிறப்பு பிரார்த்தனை... அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்பு!

 
admk

கோவை குனியமுத்தூர் ஹஜ்ரத் நூர்ஷா அவுலிநா தர்காவில் அதிமுக சார்பில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டார். 

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையத்தில் ஹஜ்ரத் நூர்ஷா அவுலிநா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரும், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட வேண்டி சிறப்பு பிரார்த்தனை இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

admk

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்மகன் உசேன்,  எடப்பாடி பழனிசாமி அதிமுக-வின் நிரந்தர பொதுச்செயலாளராக வேண்டியம், மீண்டும் முதலமைச்சராக வர வேண்டியும் 75 மாவட்டங்களில் உள்ள 70 தர்காக்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு உள்ளதாவும், தற்போது 39-வது மாவட்டமாக இன்று கோவைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஓரே இயக்கம் அதிமுக தான் என கூறிய அவர், உலமாக்களுக்கு ஒய்வூதியம், இஸ்லாமியர் வேலை வாய்ப்பு கொடுக்கவும் பல உதவிகளை அதிமுக செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

admk

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி அமைந்து,  40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். அதேபோல், சட்டமன்ற தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார் என்றும் எஸ்பி வேலுமணி கூறினார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், கே.ஆர். ஜெயராம், சூலூர் கந்தசாமி, விபி கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.