விழுப்புரம் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

விழுப்புரம் அருகே உடல் நல குறைவு காரணமாக சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு காமராஜர் நகர் ஜீவா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (57). இவர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்திக்கு கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்தார். எனினும் அவர் உடல் நிலையில் சீராகவில்லை என கூறப்படுகிறது.  இதனால் அவர் மனவேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார்.

vilupuram

இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருஷ்ணமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் சக போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.