மனைவி இறந்த வேதனையில் சித்த வைத்தியர் தற்கொலை... குமரி அருகே சோகம்!

 
poison

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மனைவி இறந்த வேதனையில் சித்த வைத்தியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள குதிரை பந்திவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வ ஜார்ஜ் (77). சித்த வைத்தியர். இவரது மனைவி மரிய தங்கம்(72). உடல் நல குறைவால் அவதிபட்டு வந்த மரிய தங்கம், கடந்த மாதம் 23ஆம் தேதி உயிரிழந்தார். இதனை அடுத்து, உறவினர்கள் அவரது இறுதிச் சடங்கு மேற்கொண்டு வந்தனர். இதனிடையே மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த செல்வ ஜார்ஜ், அவர் இறந்த வேதனையில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், செல்வ ஜார்ஜை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

kumari gh

பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வ ஜார்ஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மகன் அஜிஸ் அளித்த புகாரின் பேரில், இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி இறந்ததால் சித்த வைத்தியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.