காங்கேயத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீட்டில் விளையாடியபோது மின்சாரம் தாக்கி அரசுப்பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள நத்தப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். விவசாயி. இவரது மகன் செல்வகுமார்(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறையில் செல்வகுமார், காங்கேயம் சக்தி நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று செல்வகுமார் வீட்டின் அருகே நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த மின்சார பெட்டிக்கு செல்லும் கம்பியை அவர் தொட்டுள்ளார்.
இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் செல்வகுமார் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், செல்வகுமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.