தேனி அருகே பள்ளி மாணவி கடத்தல் - இளைஞர் போக்சோவில் கைது!

 
pocso

தேனி அருகே பிளஸ் 1 மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

தேனி மாவட்டம் வருசநாடு அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சிறுமி, அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமார் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், இதுகுறித்து வருசநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். 

arrest

இந்த நிலையில், அஜித்குமார், சிறுமியுடன் தேனியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வருசநாடு போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திய அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, மீட்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்ததால், காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.