சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.67.59 லட்சம் வசூல்... 1.8 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளியும் கிடைக்கப்பெற்றது!

 
samayapuram

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.67.59 லட்சம் ரொக்கப்பணம், ஒன்றே முக்கால் கிலோ தங்கம் மற்றும் 4 கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்வர். மேலும், நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி பொருட்களையும், உண்டியல் காணிக்கையையும் செலுத்துவர். பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் இருமுறை எண்ணப்பட்டு வருகிறது. 

hundial

அதன் படி, நடப்பு மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் மண்டபத்தில், கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. உதவி ஆணையர்கள் முன்னிலையில் பக்தர்கள், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் என ஏராளமானோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த 12 நாட்களில் சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.67 லட்சத்து, 59 ஆயிரத்து 691 ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 1 கிலோ 865 கிராம் தங்கம் மற்றும் 4 கிலோ 288 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதுடன், 118 வெளிநாட்டு கரன்சிநோட்டுகளும் வசூலானதாக, கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.