சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.81.50 லட்சம் வசூல்!

 
samayapuram

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.81.50 லட்சம் ரொக்கப்பணம், இரண்டே முக்கால் கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி ஆகியவை வசூலாகி உள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் பிரசித்த பெற்ற ஸ்தலமாகும். இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்னி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மாரியம்மனை தரிசித்து செல்வர். மேலும், தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி, உண்டியலில் காணிக்கு காணிக்கை செலுத்துவர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதம் 2 முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் மண்டபத்தில், கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. 

hundial

இதில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் பக்தர்கள், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் என ஏராளமானோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த 17 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.81 லட்சத்து 50 ஆயிரத்து 390 ரொக்கப்பணம் வசூலாகி உள்ளது. மேலும், 2 கிலோ 771 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ 451 கிராம் வெள்ளி கிடைக்கப்பெற்றதுடன், டாலர் உள்ளிட்ட 190 வெளி நாட்டு கரன்சி நோட்டுகளும் வசூலானதாக கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.