விதவை பென்ஷன் தொகை வழங்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற பெண் ஆர்.ஐ. கைது!

 
லஞ்சம்

திருவண்ணாமலை அருகே விதவை பென்ஷன் தொகை வழங்க மூதாட்டியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அருகே உள்ள ஊசாம்பாடியை சேர்ந்தவர் சுலோச்சனா(53). கணவரை இழந்த இவர் விதவை பென்ஷன் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மல்லவாடி வருவாய் ஆய்வாளர் சாஜித் பேகம், விதவை பென்ஷன் வழங்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சுலோச்சனா முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் தருவதாகவும், உதவித் தொகை கிடைத்தவுடன் எஞ்சிய தொகையை தருவதாகவும் கூறியுள்ளார்.

bribe

இந்த நிலையில், லஞ்ச விவகாரம் தொடர்பாக சுலோச்சனா, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து, அவர்களது ஆலோசனையின் படி, சுலோச்சனா ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை, நேற்று மல்லவாடி அலுவலகத்தில் வைத்து வருவாய் ஆய்வாளர் சாஜித் பேகத்திடம் வழங்கினார். அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.