சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.52 கோடி வசூல்!

 
samayapuram

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.52 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் வசூலானது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, கருர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அவ்வாறு வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் ஒரு முறை, உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.

hundiyal

அதன் படி, நேற்று மார்ச் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் மண்டபத்தில், இணை ஆணையர் கல்யாணி தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், தன்னார்வலர்கள், பக்தர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், உண்டியல் காணிக்கையாக ரு.1 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரத்து 725 ரொக்கப்பணம் கிடைக்கப் பெற்றது. மேலும், 3 கிலோ 295 கிராம் தங்கமும், 5 கிலோ 201 கிராம் வெள்ளியும் வசூலானது. மேலும், 80 வெளி நாட்டு கரன்சி நோட்டுகளும் வசூலாகி உள்ளது.