நாமக்கல் மாவட்டத்தில் 1000 மெ.டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு - ஆட்சியர் தகவல்!

 
collector namakkal

பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாபெட் நிறுவனம் மூலம் 1000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும், இத்திட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் விளைபொருளை மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 1000 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டு கொப்பரை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது தேங்காய் பருப்பு விலை 1 கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை உள்ளுர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவைக் கொப்பரை தேங்காய் விலை 1 கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை தேங்காய் -  ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
copra

நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும்  வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன்  பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். (அலைபேசி எண் 86102 - 73860)

தேங்காய் கொப்பரை கொள்முதல் 30.09.2022 வரையிலான காலம் வரை நடைபெற உள்ளது. தேங்காய் கொப்பரை விளைபொருளுக்கு  உரிய தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டுள்ள இந்த கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.