"ஆடிப்பெருக்கு - காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் நீராட வேண்டும்" - சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்!

 
collector

சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற பகுதிகளில் நீராட வேண்டாம் என ஆட்சியர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 75 ஆயிரம் கனஅடி நீரும் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுமார் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் அவ்வாறு அணைக்கு வரும் நீரானது முழுமையாக உபரி நீராக வெளியேற்றப்படும்.

மேட்டூர் அணையில் இருந்து உபரி  நீர் அதிகளவில் திறக்கப்படும் என வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தண்டோரா மூலமும், ஒலிப் பெருக்கி மூலமும், தொலைக்காட்சி, செய்தித்தாள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

mettur

மேலும், நாளை (ஆடி 18 ) ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் புனிதநீராட  வேண்டும். மற்ற பகுதிகளில் நீராட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நிர்பிடிப்பு பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, சொக்கனுர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை பூலாம்பட்டி, நெரிஞ்சிபேட்டை உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறினால் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.