புதுக்கோட்டையில் வரும் 21ஆம் தேதி பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்!

 
ration shop

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் வரும் 21ஆம் தேதி பொதுவிநியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பொது விநியோகத்திட்டத்தில்  காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும், ஜனவரி 2023 மூன்றாவது வாரத்தில் சனிக்கிழமை 21.01.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடும்ப அட்டைகள், நியாய விலைக்கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர் (கு.பொ.வ)/ வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

collector kavidha

மேற்படி முகாமில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு / மாற்றம் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம். பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொண்டு பயன்பெறலாம், என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.